நல்லதன்னியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் இயந்திரப் பகுதி இன்று (04) திடீரென தீப்பற்றியுள்ளதாக ஹற்றன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலை 10:15 மணியளவில் ஹற்றன் – மஸ்கெலியா பிரதான வீதியின் டிக்கோயா வத்தை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக இயந்திரப் பகுதியில் தீ பரவியுள்ளதுடன், அந்த வீதியால் பயணித்த ஏனைய வாகன சாரதிகளும் முச்சக்கர வண்டியின் சாரதியும் இணைந்து கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், முச்சக்கர வண்டியின் இயந்திரப் பகுதிக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீப்பற்றிய சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டியினுள் சாரதியும் மற்றுமொரு பயணியும் மாத்திரமே இருந்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

