மன்னாரில் கொடூரம்; 29 வயது மனைவி பொலிஸ் நிலையத்தில் சரண்

குடும்பத் தகராறு காரணமாக கணவனைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி மலசலகூட குழியில் வீசிய மனைவியின் செயல் மன்னார் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மன்னார் மூர் வீதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், 29 வயதுடைய மனைவி தனது கணவனைத் தாக்கி கொலை செய்துள்ளார்.

 

பின்னர், ஆதாரங்களை மறைக்கும் நோக்கில் நேற்று(03) கணவனின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் உடல் பாகங்களை உறைகளில் (சாக்குகள்) பொதி செய்து, வீட்டின் மலசலகூடக் குழியில் வீசியுள்ளார்.

 

இந்தக் கொடூரச் செயலைச் செய்த பெண், இன்று(04) மன்னார் பொலிஸ் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர்.

 

மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில், மலசலகூடக் குழியில் இருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *