கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப் பயிற்சி கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் நேற்று (09) இடம்பெற்றது.

 

இலங்கையில் பல சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் அம்மன் மகளிர் இல்ல பௌன்டேஷன் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இளம் ஊடகவியலாளராக உருவாக்கும் எண்ணக்கருவுக்கமைய இப்பயிற்சிநெறி மாவட்டத்தில் இரண்டாவது இளைஞர் தொகுதியினருக்கு இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இதன்போது செய்தி எழுதுதல், ஊடக தர்மம், போலிச் செய்திகளைக் கண்டறிதல் மற்றும் இணையப் பாதுகாப்பு, சமூக ஊடகங்களை கையாளும் விதம், போன்ற முக்கியமான தலைப்புகளில் அனுபவம் வாய்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சி நெறியின் இறுதியில் சான்றிழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர்களான தேவஅதிரன், சக்திவேல், துசாந்தன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு ஊடகப் பயிற்சிகளை வழங்கினர்.

 

சான்றிதழ் வழங்கும் இந்நிகழ்வில் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் வாமதேவன், இணைப்பாளர் ரஞ்ஜித்குமார், அவ்வமைப்பின் ஆலோசகளும் பிரபல சமூக சேவையாளருமான கமலதாஸ் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *