தமிழக சட்டசபையில் ஜெயலலிதா, மு.க ஸ்ராலின் போன்றோர் தமிழக சட்டசபைகளில் ஈழத்தமிழர்கள் தொடர்பாக கொண்டு வந்த தீர்மானங்களை விட வலுமிக்க தீர்மானங்களைக் கொண்டு வந்து தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தர புதிதாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள யோ. விஜய் முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்று(10) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மிகப்பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈழத்தமிழர்களின் படுகொலை நடந்த மே மாதம் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ள யோ. விஜய் தமிழ் மக்களின் துன்பதுயரங்களை நன்கு அறிவார்.
இளம் வயதில் தன்னுடைய பொறுப்புக்களை எடுத்துள்ளார். இனி வரும் காலங்கள் இவருக்கு சவால் மிகுந்தவை. அரசியலில் புது வரவு இவரின் வரவு தமிழ் நாட்டு மக்களிடையே மாத்திரம் இல்லை உலக தமிழர்களிடையே பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 2009 ஆண்டுக்கு முற்பட்ட 30ஆண்டுகளாக மிகுந்த போராட்ட வலிகளோடு பயணித்த ஈழத்தமிழர்கள் இவற்றை அறிந்தவர் என்ற வகையில் அவரின் பார்வை ஈழத்தமிழருக்குரியதாக இருக்கும். ஏற்கனவே தமிழக சட்டசபையில் ஜெயலலிதா, மு.க ஸ்ராலின் போன்றோர் தமிழக சட்டசபைகளில் ஈழத்தமிழர்கள் தொடர்பாகக் கொண்டு வந்த தீர்மானங்களை விட வலுமிக்க தீர்மானங்களைக் கொண்டு வந்து தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அண்மைக்காலமாக மர்மமான முறையில் இறப்புக்கள் பதிவாகின்றன. சிறீலங்கா எயார்லன்ஸ், நிறைவேற்று அதிகாரி கபில சந்திர திறைசேரின் முக்கிய அதிகாரி ரங்க ராஜபக்ச போன்றோர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். குற்றவாளிகளை வெளிநாடுகளிலிருந்து பிடித்து வருகின்ற இந்த அரசாங்கம் இவற்றிற்கு உரிய விசாரணை நடாத்தி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
தமிழரசுக்கட்சியின் வடமாகாணம் ரீதியில் நடாத்திய மே தின கூட்டத்திற்கு கலந்து கொள்ளாமை தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.
புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் பொருளாதார காரணத்தை காட்டி காலம்தாழ்த்தும் செயற்பாட்டில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

