மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று(13) பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கந்தசாமிபிரபு தலைமையில் நடைபெற்றது.

 

இக் கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோருடன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை, கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், திணைக்கள பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

பிரதேச செயலாளரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான விளக்க உரையுடன் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து, முன்னைய பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கூட்டறிக்கை முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.

 

கூட்டத்தின் போது, மண்முனை மேற்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றிற்கான அனுமதிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

 

அத்துடன், பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை, சட்டவிரோத மண் அகழ்வு, மனித–யானை மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

இதனுடன், முன்னைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற நிலை மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளை காலத்திற்கேற்றவாறு நடைமுறைப்படுத்த தேவையான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *