நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.

 

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

 

காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (35-45) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *