ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.

 

அம்பாறை மாவட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கில், அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெறும்.

 

மேலும், பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் தடைப்பட்டிருந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

 

வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து, அதனை எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கில், இந்தக் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 945.04 மில்லியன் ரூபா என்பதுடன், இதன் நிர்மாணப் பணிகளை 2027-12-31 ஆம் திகதி நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

மேலும், அம்பாறை நகரத்தின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளும் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 1,744.85 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், 2028-12-31 ஆம் திகதி நிறைவுசெய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *