மட்டக்களப்பில் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து தங்க ஆபரணம் கொள்ளை

மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு  அமர்த்தி கொண்டு சென்று சாரதிக்கு மயக்க மருந்து  தெளித்து அவரின் தங்க ஆபரணங்கள், பணம் கையடக்க தொலைபேசி கொள்ளையிட்டு விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். ரிதிதென்னை காட்டு பகுதியில் மயங்கிய நிலையில் இன்று (28) சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

நகரின் சின்ன ஆஸ்பத்திரி ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து வாடகைக்கு சவாரி செய்துவரும் பூநொச்சி முனையைச் சேர்ந்த 62 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் சம்பவ தினமான நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு வீடு சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஆட்டோ தரிப்பிடத்திற்கு சென்று இரவு சாப்பாட்டிற்கு இடியப்பம் வாங்கி கொண்டு 7 மணிக்கு வருவதாக உறவினருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து குறித்த ஆட்டோவை ஒருவர் வாழைச்சேனை வரை செல்வதற்காக வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்றுள்ள நிலையில் இரவு 11.00 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்து ஆட்டோ சாரதியின் உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் இன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதி தென்னை காட்டு பகுதியை அண்டிய பகுதியில் ஆட்டோ ஒன்றில் ஆட்டோ சாரதி ஒருவர் தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசி, பணம் கொள்ளையிட்ட நிலை மயங்கி கிடப்பதை கண்டு கொண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் மயக்கத்தில் கிடந்த சாரதியை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி சென்று அவருக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுவிட்டு அவரை காட்டு பகுதியில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மட்டு தலைமையக மற்றும் வாழைச்சேனை பொலிசார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *