கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் இன்று(02) நற்சான்றிதழ்களை வழங்கி உறவினர்களிடம் சம்பிரதாயப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் கீழ் தேசிய அபாயபர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் போதைப் பொருளுக்கு அடிமையானவர் களுக்கான புனர்வாழ்வு இடைத்தங்கல் நிலையம் கடந்த மே மாதம் 20ம் திகதி திறந்து வைக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக 30 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட 30 பேரையும் சமூகத்தில் இணைக்க உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவடட்ட இணைப்பாளர் டினேஸ் தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ரசாக், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜூஸ், மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் கே.மோகனகுமார், உளநல வைத்தியர் டான், உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு 14 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற 30 பேருக்கும் நற்சான்றிதழ் வழங்கி வைத்தனர்

இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்றவர்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தமது அனுபவங்களை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *