சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை திருமலை வீதியின் இருமருங்கிலும் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளின் நலன் கருதி நிழல் தரும் மரங்கள் இன்று நடப்பட்டன.
குறித்த திட்டத்திற்கான அனுசரணையை அரச சார்பற்ற நிறுவனங்களான கரித்தாஸ் மற்றும் எகெட் என்பன வழங்கியிருந்தன.
சுற்றுச் சூழலை பாதுகாத்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் பசுமையான சூழலை உருவாக்கும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் அமலினி தலைமையில் நடைபெற்றது.
காலநிலை மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நாங்கள் எங்களது சூழலை பாதுகாத்து செயற்பட வேண்டுமென இதன்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் காலநிலை மாற்றத்தால் அதிக வெப்பநிலை, அபரிவிதமான மழை, இயற்கை அனர்த்தங்கள், காலம் தப்பிய மழை வீழ்ச்சி என காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை கூறலாம்.
சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக வருடாந்தம் 7மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் இடம்பெறுகின்றன.
சட்டவிரோத காடழிப்பினாது இயற்கைக்கு மாறானதொரு செயற்பாடாகும். 2 மில்லியன் மக்களுக்கு சுத்தமான நீரை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் மதுமிதா, சமூர்த்தி முகாமையாளர் கலைவாணி, எகெட் சுற்றுச்சூழல் செயற்திட்ட இணைப்பாளர் ஜெயசெல்வம், எகெட் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சகிலா பிரதிப் ஆகியோர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கமநலசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


