டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (09) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டார்.
புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கும் ஆலயங்களை புனரமைப்பதற்குமான இரண்டாம் கட்ட நிதியுதவி இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
அதன்படி, மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்காக 15 ஆலயங்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கப்பட்டதுடன், 13 ஆலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்காக தலா 250,000 ரூபாய் நிதியும், மேலும் ஒரு ஆலயத்திற்காக 350,000 ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களை மீளுருவாக்கம் செய்து சமூகத்தில் மீண்டும் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே. குணநாயகம், அரச அதிகாரிகள் மற்றும் ஆலய நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

