காலநிலை மாற்ற அபாயங்களை எதிர்கொள்ள சமூக மட்ட செயல் திட்ட கலந்துரையாடல்

காலநிலை மாற்ற அபாயங்களை எதிர்கொள்ள சமூக மட்ட செயல் திட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் பழைய மாட்ட செயலகத்தில் இன்று (09) இடம் பெற்றது.

 

இலங்கையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி, ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி, வெள்ளம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில், சமூக மட்டத்தில் காலநிலை தழுவல் மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் புதிய திட்டம் வாகரை, மண்முனை வடக்கு, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

“இலங்கையில் உள்ளூர் மட்டத்தில் மீட்சித்திறனை உருவாக்குவதற்கான சமூக வழிநடத்தும் காலநிலை தழுவல் மற்றும் காலநிலை அபாயக் குறைப்பு” எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்களின் தழுவல் திறனையும் மீளெழும் ஆற்றலையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வழிநடத்தலில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, ஐ.நா. மனிதக் குடியிருப்பு திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

 

தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டமான “பிரஜாசக்தி”யுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம், மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்து, மாறிவரும் காலநிலைச் சூழல்களை நிலைத்தன்மையுடன் எதிர்கொள்ளும் திறனை உருவாக்க உதவுவதுடன் இயற்கை சார்ந்த மற்றும் காலநிலை புத்திசாலித்தனமான தலையீடுகள் ஊடாக, கிராம மட்டத்தில் காலநிலை தழுவல் தீர்வுகள் செயற்படுத்தப்படவுள்ளன.

 

20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் மூலம் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்கு இது முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ளது.

 

இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதன், உலக அபிவிருத்தி திட்ட அதிகாரி கே.பார்த்தீபன், பிரதேச செயலாளர்கள், ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான இணைப்பாளர் வின்சன் ஞானதீபன், துறைசார்நிபுணர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் காலநிலை மாற்றத்தினால் விவசாயம், கால்நடை மற்றும் பல விடயங்களில் தாக்கங்கள் செலுத்துவதினால் பாதிப்புக்களை குறைப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *