கல்முனை மக்கள் பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் – உதுமாங்கண்டு நாபீர்

சம்மாந்துறை மக்கள் நன்றியுள்ளவர்கள். அதுபோன்று அரசியல் ரீதியில் கல்முனை மக்களும் பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.

 

கல்முனை மாநகருக்கான இடைநிறுத்தப்பட்ட தேர்தல் நடைபெறும் என்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் மேலும் குறிப்பிடும்போது,

 

கல்முனை மாநகரின் கடந்த கால அரசியல் நிலைமைகள் அபிவிருத்திகள் எல்லாவற்றிலும் மக்கள் வெறுப்படைந்து காணப்படுகின்றனர். அரசியல்வாதிகளின் பொடுபோக்கான நிலைமைகள் இதற்கு காரணமாகும்.

 

கல்முனை மாநகர சபையில் இடம் பெற்ற ஊழல் தொடக்கம் கல்முனை மாநகர அபிவிருத்தி மாயைகள் மக்கள் மனங்களை பெரிதும் புண்படுத்தியதை நாங்கள் அறிவோம். எனவேதான் வளமான மாநகரை, சாய்ந்தமருது பிரதேசத்தை, கல்முனை பிரதேசத்தை மற்றும் தற்போதைய கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட ஏனைய பிரதேசங்களை ஆளக்கூடிய, செயற்பாட்டு ராஜாக்களை கொண்ட கட்சியாக, குழுவாக எமது கட்சி இம்முறை தேர்தல் களத்தில் நிற்கும்.

 

எமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வாக்கும் மக்களின் சேவைகளை முன்னிறுத்தி செயல்படும் சேவகர்களை உருவாக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அது போன்று சம்மாந்துறை மக்கள் எமது செயற்பாட்டில் நம்பிக்கை வைத்து வாக்களித்ததன் விளைவே கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நாம் சார்ந்த சுயேட்சை குழு, ஒரு உறுப்பினரை பெற்றது. அது போன்று சாய்ந்தமருந்து தாய் பிரதேச மக்களும் எமது கைகளை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

இந்த நிலையில் எமது பிரதேச படித்த இளைஞர் யுவதிகள் எமது அணியில் இணைந்து தேர்தலில் களமிறங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

மிக விரைவில் அவர்களை நாம் நினைத்துக் கொண்டு ”மக்களுக்காகவே நாம்” என்ற தொனிப் பொருளில் எமது சேவையை தொடர எண்ணி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *