மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்பனை விலையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) நண்பகல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டம் பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்நோக்கும் பிரதேசமாக இருப்பதுடன், அப்பகுதி மக்கள் மாட்டிறைச்சியை அதிகம் விரும்பி பயன்படுத்தி வருவதையும் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மாட்டிறைச்சி விற்பனை விலைகளை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஒரு கிலோ தனி மாட்டிறைச்சி 2,200 ரூபாவிற்கும், 800 கிராம் இறைச்சியுடன் 200 கிராம் எலும்பு சேர்த்த ஒரு கிலோ இறைச்சி 2,000 ரூபாவிற்கும், தனி முள்ளு இறைச்சி 1200 ரூபாவிற்கும், ஒரு கிலோ ஈரல் 2,500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், தீர்மானிக்கப்பட்டதுடன்,
நுகர்வோர் இறைச்சியின் எடையை பார்க்கும் அளவிற்கு தராசுகள் பயன்படுத்த வேண்டும் எனவும், இறைச்சிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதோடு விலைப்பட்டியலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விலை நிர்ணயம் தொடர்பில் மன்னார் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டத்திலேயே மாட்டிறைச்சி என்பது ஒரு முக்கியமான உணவாகக் காணப்படுகிறது. எனவே இன்று இந்த விசேட கூட்டமானது அனைத்து பங்குதாரர்களுடனும் நடாத்தப்பட்டது.
அத்தோடு நேற்று பண்ணையாளர்களுடன் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதிலே மக்களுக்கு நியாய விலையில் இறைச்சியை வழங்கும் பொருட்டு மாடுகளை இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு கிலோ ஒன்று 1700 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு 02.06.2026 அன்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இன்றும் குறிப்பிட்ட விலைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், அந்த விலைகளுக்கு அமைவாகவே மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அத்துடன் இந்த விலையானது விலை பாதுகாப்பு அதிகாரிகளினால் கடுமையாக பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இறைச்சியின் விலையை நியாயமாகப் பேணும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை மாடுகளை இறைச்சிக்காக மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்வதற்குத் தடை விதிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே எட்டப்பட்ட இந்த தீர்மானங்களை செயல்படுத்தும் பொருட்டு பொதுச் சுகாதார அதிகாரிகள் கால்நடை வைத்தியர்கள் போன்றவர்களின் சேவைகளில் ஏற்படுகின்ற தாமதங்களை நிவர்த்திப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வட மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், நகர சபைத் தலைவர், மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர், கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

