இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன தலைமையில் கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் எம்.பி. விஜேரத்ன மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் எஸ்.டி.சேனக சில்லா ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திற்கான விசேட கூட்டம் நேற்று(12) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மதுவரி திணைக்களத்தின் கணக்காய்வுகள், செயற்பாடுகள், கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாண மட்டத்தில் மதுவரி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
மேலும் வருடாந்த முன்னேற்றங்களை மதிப்பீடு செய்து எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான ஆலோசனைகள் உயர் அதிகாரிகளினால் இதன் போது வழங்கப்பட்டது.
மேலும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துதற்கா விசேட செயற்திட்டங்களை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் மதுவரி திணைக்களத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கமைப்பு பிரதி ஆணையாளர் திஸ்ஸகுமார, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

