மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு உட்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள அன்வர் வித்தியாலயத்தில் சுற்றாட செயல்பாடுகள் தொடர்பான கண்காட்சி முகாம் அண்மையில் (11) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி எம் எஃப் எம் ஃபைசரின் தலைமையில் பாடசாலை ஆசிரியர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றாடல் பாடவிதானத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களை, சுற்றாடல் தொடர்பான செயற்பாட்டுக் கண்காட்சி முகாமாக நடாத்தப்பட்ட நிகழ்வில், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி ஏ.ஜே .மர்சூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
காத்தான்குடி கோட்டக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்வி ஆலோசகரும் பிரதி கல்விப் பணிப்பாளருமான கே. ஜேவதனன் மற்றும் ஆரம்பக் கல்விப் பிரிவின் ஆசிரியை ஆலோசகர் திருமதி தஸ்லிமா றிஸ்வி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக இடம் பெற்ற இக்கண்காட்சியில், தரம் 3 மற்றும் 4 வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் அதிகமான மாணவர்கள் தமது திறமைகளை காட்சிகளாக வெளிப்படுத்தினர்.
இதன்போது, எமது நல்வாழ்வு மற்றும் மனித நடத்தைகள் தொடர்பாகத் தரம் 3 வகுப்பு மாணவர்கள் எம். ஹபீபா ஆசிரியை தலைமையிலும், நாம் இலங்கையர் மற்றும் எமது உணவு குறித்த விடயங்களை காட்சிகளாக தரம் 3 G வகுப்பு மாணவர்கள் எஸ். சிபாயா ஆசிரியையின் தலைமைத்துவத்திலும், மரஞ்செடி கொடிகளை காட்சி வடிவில் ரிஷாதா ஆசிரியையின் தலைமைத்துவத்திலும், எம்மைச் சூழவுள்ள பிராணிகள் தொடர்பான காட்சிப்படுத்தல் ரவிவர்மன் ஆசிரியர் தலைமையிலும், எம்மால் சூழலில் செய்யக் கூடிய மாற்றங்களுக்கான காட்சிகளை சப்ரியா ஆசிரியையும், பாதுகாப்பும் கரிசளையும் எனும் தொனிப்பொருளில் ஹம்னா ஆசிரியையின் தலைமைத்துவத்திலும் மாணவர்கள் காட்சிப்படுத்தலில் ஈடுபட்டனர்.
மேலும் நீர் குறித்த காட்சிப்படுத்தலை ரிம்சியா ஆசிரியையின் வழிகாட்டலிலும், போக்குவரத்து தொடர்பாக நுப்ரா ஆசிரியையின் தலைமைத்துவத்திலும், வீட்டுத் தோட்டம். குறித்த காட்சிகளை அல்பியா ஆசிரியையும், வேலைகளை இலகுபடுத்தும் வழிகள் தொடர்பாக ராதிகா ஆசிரியையும், நிலமும் வானும் எனும் தொனிப்பொருளில் ஆசிரியை நுஸ்ராவும் மாணவர்கள் தமது விடயதானங்களை காட்சிப்படுத்த வழிநடாத்தினார்.
அத்துடன், மனிதனும் தகவல்களும் மற்றும் எமது பண்டைய சபூஸ்டன் ஆசிரியையும் அவசியமான விடயங்களை காட்சிப் படுத்துவதற்கு மாணவர்களை வழிநடாத்தினார்.
பாடசாலை மாணவர்களினதும், பெற்றோர்களின் முழுமையான பங்கேற்புடன் நடைபெற்ற கண்காட்சியை காத்தான்குடி கல்வி கோட்டத்தில் உள்ள சகல ஆரம்ப கல்வி பாடசாலைகளின் தரம் 3 மற்றும் 4 வகுப்புகளைச் சேர்நத மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் என பலர் பார்வையிட்டனர்.

