கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை(18) கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகநேரி கோகுலம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது வாகநேரி கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாணவர் மற்றும் அதிதிகள் மலர் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மிகவும் பின்தங்கிய பிரதேசமான வாகநேரி மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஆகமச் செம்மல் சிவஸ்ரீ கிருஷ்ண ஜினுராஜ சிவாச்சாரிய குருக்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்கி வைத்தார்.
ஏனைய அதிதிகளும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனர். அத்துடன் கிராம சேவகர் சண்முகம் குரு சிவில் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் குடா முனைக்கல் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகளால் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிவஸ்ரீ கிருஷ்ண ஜினுராஜ சிவாச்சாரிய குருக்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


