இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான என். எம். அமீனைக் கௌரவிக்கும் வகையிலான விசேட சந்திப்பும் பாராட்டு விழாவும் எதிர்வரும் 26 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ளது.
‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் கம்யூனிட்டி கனடா’ அமைப்பினால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் ஸ்கார்பரோவில் அமைந்துள்ள அமானா மாநாட்டு மண்டபத்தில் அன்றைய தினம் பி.ப. 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஊடகத்துறை மற்றும் சமூக மேம்பாட்டிற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துச் சேவையாற்றிய என். எம். அமீனின் பணிகளைக் கௌரவிக்கும் வகையிலும், அவருடன் கனேடிய வாழ் மக்கள் கலந்துரையாடும் வகையிலும் இச்சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தற்போது ‘உதயம்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் என். எம். அமீன், தினகரன் உள்ளிட்ட லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களின் முன்னாள் முகாமைத்துவ ஆசிரியராகவும், நவமணி தேசியப் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றி ஊடகத்துறையில் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசேட பாராட்டு விழாவில் கனேடிய வாழ் இலங்கை சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நலன்புரி அமைப்பினர் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

