2026 ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று (23) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஜயசுந்தர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தத்தால் இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேறிய குடும்பங்களுக்காக 2026ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

 

இதன்போது, மீள்குடியேற்றத் திட்டங்களின் தற்போதைய நிலை, பணிகளின் செயற்திறன் மற்றும் வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அமைச்சின் மேலதிக செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

 

மேலும், திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் நீர்வழங்கல் அமைச்சின் பணிப்பாளர் கே.ஜி.பி. பூர்ணிமா அபேஸ்ரீ குணவர்த்தன, பிரதேச செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இதன் போது மீள்குடியேறிய குடும்பங்களுக்கான வீடமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் போது எதிர்கொள்ளப்படும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

 

மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய குடும்பங்களுக்கு இவ்வருடம் 453 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *