“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (26) கதிரவெளி விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் வைபவ ரீதியாக நடைபெற்றது.
மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே. விமலாநாதன் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் செயற்பாடு தடையின்றி இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் சிறப்புரையாற்றியதுடன். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வாகரை பிரதேசத்தில் “டித்வா “புயலினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளான கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம், பால்சேனை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் வட்டவான் பாடசாலை என்பனவற்றில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி இவை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதிகளாக வாகரை பிரதி அபிவிருத்தி கல்வி பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் கே. அமலினின் ஆகியோர் கலந்து கொண்டனர்.


