அரசியலமைப்பு மீறல்கள் மற்றும் நீதித்துறைச் சுதந்திரம் – ரவூப் ஹக்கீம்

பாராளுமன்றத்தில் சென்ற புதன் கிழமை(24) இடம்பெற்ற விவாதத்தின் போது, அரசாங்கம் சமர்ப்பித்துள்ள ‘தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்’ மற்றும் நாட்டின் நீதித்துறை நியமனங்களில் நிலவும் சீர்கேட்டை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார்.

 

அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை மீறும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நீதித்துறையின் மூப்பு உரிமையை அலட்சியப்படுத்தும் விதம் குறித்து அவர் தெளிவான கருத்துக்களை முன்வைத்தார்.

 

‘தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்’ அரசியலமைப்பின் 154-ஜி பிரிவை அப்பட்டமாக மீறுவதாக ரவூப் ஹக்கீம் அங்கு சுட்டிக்காட்டினார். மாகாண சபைகள் இயங்காத தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, முறையான ஆலோசனைகளைத் தவிர்த்து, வலுக்கட்டாயமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் எத்தனிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். இது மாகாணங்களின் அதிகாரத்தை மத்திய மயப்படுத்தும் ஒரு திட்டமிட்ட முயற்சி என்றும், ‘திவி நெகும’ போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது கையாளப்பட்ட அதே ஜனநாயக விரோத முறையே இப்போதும் பின்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இந்தச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கம் முன்வைக்கும் வாதத்தை அவர் முற்றாக நிராகரித்தார். சட்டமா அதிபர் திணைக்களம் கூறுவது மட்டுமே இறுதி உண்மை என்று கருத முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். நிதி பரிவர்த்தனை ஒழுங்குமுறைகள் மற்றும் நிதி மோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான விவாதங்களின் போது, மத்திய வங்கி ஆளுநர் தனது பொறுப்பிலிருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில், சட்டத்தின் பிரிவுகளின்படி அவர்கள் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் இருப்பதை தான் சுட்டிக்காட்டியதாக அவர் நினைவுபடுத்தினார். அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் விளக்கம் அளிக்க முடியாமல் மௌனம் காத்தது, அவர்களது சட்ட ஆலோசனைகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

நீதித்துறை தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் தலையீடுகள் மிகவும் ஆபத்தானவை என எச்சரித்த ஹக்கீம், நீதிபதிகளின் நியமனங்களில் ‘மூப்பு நிலை’ திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் கவலை வெளியிட்டார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது, நீதிபதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகிறது. மூத்த நீதிபதிகளை அமர்வுகளுக்கு நியமிக்கும் மரபு கைவிடப்பட்டுள்ளதாகவும், தகுதியான நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி கடமைப்பட்டிருந்தும் அதனைத் தவிர்ப்பது, நீதிபதிகளுக்கு ஒருவித அழுத்தத்தை-லஞ்சம் கொடுக்கும் செயலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

நீதித்துறை நியமனங்களில் மூப்பு நிலையின் முக்கியத்துவம் பற்றி விளக்க, இந்திய உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை ரவூப் ஹக்கீம் சிறந்ததோர் உதாரணமாக எடுத்துக் காட்டினார். இந்தியாவில் பதவி உயர்வு வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை என்றும், மூப்பு நிலை மிகத் துல்லியமாகப் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

 

“தற்போதைய இந்திய தலைமை நீதியரசர் சூர்ய காந்த், 27ஆம் திகதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். அவரைத் தொடர்ந்து நீதியரசர் விக்ரம் நாத் பிப்ரவரி 27 முதல் செப்டம்பர் 27 வரை பதவியில் இருப்பார். அதன்பிறகு பெண் நீதியரசர் பி.வி. நாகரத்ன தலைமை நீதியரசராக வருவார். அவர் 36 நாட்கள் மட்டுமே தலைமை நீதியரசராக இருப்பார். இவ்வளவு துல்லியமாக மூப்பு நிலைக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக முறை அங்கு உண்டு,” என்றார்.

 

இத்தகைய வெளிப்படைத்தன்மை கொண்ட நியமன முறையே ஜனநாயகத்தின் பலம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

 

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய சட்டமூலத்தையும் அல்லது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணான நடவடிக்கைகளையும் தமது கட்சி ஆதரிக்காது என்று மு.கா. தலைவர் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்ததோடு, நாட்டின் நீதி நிர்வாகத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இத்தகைய முறைகேடான தலையீடுகள் எதிர்காலத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்த அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களைக் கட்டிக் காக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

 

(விருட்ச வேந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *