வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு; 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றர் சீனிப் பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

 

வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சுரேந்திரனின் ஆலோசனையின் கீழ் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் மேஜெயாவின் வழிப்படுத்தலில் நெளுக்குளம் பொது சுகாதார பரிசோதகர் ம.அன்ரன் தலைமையில் பூவரசன்குளம் பொது சுகாதார பரிசோதகர் டிலுக்சன், கூமாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் பவிந்திரன், சாஸ்திரி கூழாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் துவாரகன் ஆகியோர் இணைந்து பொலிசாரின உதவியுடன நேற்று இரவு (26) சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

 

இதன்போது குறித்த வீட்டில் 40 லீற்றர் கொண்ட 7 கலன்களில் நிரப்பட்டிருந்த சீனிப் பாணி மற்றும் பெரல்களில் காய்ச்சப்பட்டிருந்த சீனி பாணி என 580 லீற்றர் சீனிப்பாணி கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அவற்றை அடைப்பதற்கான வெற்றுப் போத்தல்கள், தேன்வதைகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டதுடன் அவை பொது சுகாதார பரிசோதகர்களால் மீட்க்கப்பட்டது.

 

இதன்போது, குறித்த வீட்டில் சீனிப் பாணியினை காய்ச்சி விற்பனை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணகளின் பின் குறித்த பொருட்களை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

இதேவேளை, வவுனியாவில் இவ்வாறு அதிகளவிலான சீனிப்பாணி கைப்பற்றப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *