யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் உபகுழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று(17) பி. ப 02.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபனின் வரவேற்புரை மற்றும் முன்வைப்பினைத் தொடர்ந்து, துறை ரீதியாக முன்மொழியப்பட்ட வீட்டுத்திட்டம், சுகாதாரம், வீதிகள், போக்குவரத்து, வீட்டுத்திட்டத்திற்கான மணல் தேவைப்பாடு, தென்னை பயிர்ச் செய்கை சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள், குடிநீர் இணைப்புக்கள், யாழ்ப்பாண நகரத் திட்டம் என்பன விரிவாக ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில் அமைச்சர் குறிப்பிடுகையில், 2025, 2026ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீடுகள், மக்களைச் சென்றடைந்த திட்டங்கள், நிறைவேறாத திட்டங்கள் என்பன தொடர்பாக அனைத்து தரவுகளையும் உள்ளடக்கி யாழ் மாவட்டத்தின் இருக்கும் திட்டங்களின் கொள்கைகளை தயாரிக்கும் திட்டமாக தீர்மானங்களை எடுப்பதற்காக இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மாகாணமும் மாவட்டமும் இணைந்து வேலைத்திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மேற்கொள்ளுமாறும், இக்கூட்டத்திற்கு முடிவுகளை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் துறை ரீதியாக திணைக்களத் தலைவர்களை பங்களிப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் திட்டங்களை துறை ரீதியாக ஆராய்வது என தீரமானிக்கப்பட்டு அடுத்த ஆகஸ்ட் மாத மாவட்ட திட்டமிடல் உப குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கல்வி தொடர்பாக ஆராய்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர்கள் தங்களுடன் தொடர்புடைய திணைக்களங்கள், சமூக மட்ட அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு சுகாதாரம், கல்வி தொடர்பான தேவைப்பாடுகளை ஜீலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண, உதவிப் பிரதம செயலாளர் திருமதி. அனெற் நிந்துஸா அன்ரனி டினேஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

