அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பங்கேற்பதற்கு ஈரான் நிபந்தனைகளை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரியான மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei), கட்டார் மத்தியஸ்தர்கள் ஊடாக இந்நிபந்தனைகள் வெள்ளை மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை தடைகளை நீக்குதல் ஆகியன இந்நிபந்தனைகளில் அடங்குகின்றன.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்காவிற்கு மொத்தம் 07 நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்கா போரிலிருந்து விடுபட வேண்டுமானால் இந்நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

