தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று(14) காலை ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.
குறித்த ஊர்தியானது இன்று(15) கிளிநொச்சிக்கு வந்திருந்தது. பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தரித்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊர்திப்பவனி வடக்கைச் சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதி போரின் சாட்சியங்கள் குறித்த வாகனத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
குறித்த வாகனபவனி மாவட்டம் தோறும் வீதிகளில் பயணிக்கும் போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


