சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (02.04.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது ஆளுநரிடம் யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.
ஆளுநர் கருத்து தெரிவித்தபோது ,
1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை எமது மக்களுக்குச் செய்து வருகின்றது. அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடக்கில் சிறுவர் துஷபிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன. வடக்கு மாகாணம் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன.
சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதாரப் பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை ஒரு காரணமாக உள்ளபோதும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
சிறுவர் இல்லங்களை நோக்கி வருபவர்களை இணைக்காவிட்டாலும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. இது எமக்கு சிக்கலான நிலைமையாக உள்ளது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.
மனநல பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான அரச இல்லங்கள் இல்லை என வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியோனா அஸ்லான்சிவிலுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *