மீனவ சமூகப் பிரச்சினைகளுக்கு கைத்தொழில், கடற்றொழில் அமைச்சுகளின் ஒருங்கிணைந்த தலையீடு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில், 14வது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம்(16) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு துரித தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபருடன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்களும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர முதல்வர்கள், பிரதேச சபை தலைவர்கள், நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமளவிலான மக்கள் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மீனவ சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்:

வாழைச்சேனை கடற்றொழில் துறைமுகத்தை விஸ்தரிப்பதன் அவசியம்: தற்போது 200-300 படகுகளுக்கு மாத்திரம் வசதிகள் உள்ள வாழைச்சேனை கடற்றொழில் துறைமுகத்தின் இறங்குதுறையை விஸ்தரிக்க வேண்டியதன் அவசியத்தை கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். இப்பகுதிக்கு இதுவே ஒரே ஒரு கடற்றொழில் துறைமுகம் என்பதால், 500-600 பலநாள் படகுகளுக்கு இடமளிக்கும் வகையில் துறைமுகத்தை விஸ்தரிப்பதன் முக்கியத்துவத்தை கடற்றொழில் சமூகம் வலியுறுத்தியது.

உள்நாட்டு மீனவர்களின் போக்குவரத்துப் பிரச்சினைகள்: உள்நாட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் வழியாக பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்துப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தமது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் பிரதி அமைச்சர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கடற்றொழில் தொழிலில் ஈடுபடுபவர்கள் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு, அவற்றை மீறாமல் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்கள் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள சில திட்டங்களையும் இங்கு குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *