ரவுடித்தனம் செய்கின்றதா தேசிய மக்கள் சக்தி : கொந்தளிக்கிறார் சுமந்திரன்

யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் ஆதரவு தமிழ்க் கட்சிகளிற்கு கிடையாது அது தேசிய மக்கள் சக்திக்கே கொடுக்கப்பட்டுள்ளது என ஓர் தவறான விளம்பரம் தரப்படுகின்றது அத்துடன் அமைச்சர் சந்திரசேகரத்தின் பேச்சு காடைத் தனமான முறையில் அரசாங்கம் செயல்பட ஆரம்பித்திருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது

என தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று  நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன்  மேலும் விபரம் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் ஆதரவு தமிழ்க் கட்சிகளிற்கு கிடையாது அது தேசிய மக்கள் சக்திக்கே கொடுக்கப்பட்டுள்ளது என ஓர் தவறான விளம்பரம் கொடுக்கப்படுகின்றது. போட்டியிட்ட கட்சிகளில் அவர்களிற்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில் அப்படியாக சொல்லுகின்றார்கள். நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தில் 25 சதவீதமான வாக்கினைப் பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தமிழ் அரசுக் கட்சி 20 வீதத்தை அண்மித்த வாக்கினைப் பெற்றது.

தமிழர் தேசம் முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினரைக்கொண்டு வியாபித்துள்ள ஒரே தமிழ்க் கட்சி தமிழ் அரசுக் கட்சி மட்டும்தான். பிரிந்து ஏனைய உதிரிக் கட்சிகளிற்கும் வாக்களித்தால் அரசாங்கத்திற்கு ஆணை கிடைத்திருக்கின்றது என்பதைப் போன்று தோற்றம் ஏற்படும்.

வடக்கு கிழக்கில் தமிழ் அரசுக் கட்சி 59 சபைகளில் போட்டியிடுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுத்தமான நாடு என அதாவது கிளீன் சிறிலங்கா என ஆட்சிக்கு வந்தவுடன் ஓர் வேலைத் திட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் செய்யாத அளவு தேர்தல் விதிமுறை மீறல்களை அவர்கள் நேரடியாகவே செய்கின்றார்கள்.

அமைச்சர் சந்திரசேகரத்தின் உரையைப் பார்த்தேன் அதில் அவர் கூறுகின்றார் எமது கூட்டத்தை நிறுத்தப்பார்த்தார்கள் எனவும் முன்னாள் தவிசாளரை நரியென்ற சொல் பிரயோகம் செய்தார், அதன்போது அவர்களிற்கு விளையாடத் தெரிந்தால் எங்களுக்கும் விளையாடத் தெரியும் என்று ஒரு ரவுடி பாணியில் சவால் விடுகின்றார்.

அரசிடம் நான் நேரடியாக கேட்க விரும்புவது இதுதானா உங்கள் கிளீன் சிறிலங்கா .

நேரடியாகவே தேர்தல் விதிகளை மீறிக்கொண்டு மீறுவது மட்டுமன்றி ஓம் நாம் மீறுவோம் எங்களிற்கு அப்படி விளையாடத் தெரியும் என்று சவால் விடுகின்ற அளவிற்கு காடைத் தனமான முறையில் அரசாங்கம் செயல்பட ஆரம்பித்திருக்கின்றது. இது வாக்காளர்களிற்கும் விழிப்புணர்வைக்கொண்டு வர வேண்டும்.

ஊழல் அற்ற ஆட்சி, சீரான ஆட்சி, சட்டத்தை மதிப்போம் என்றெல்லாம் சொல்லுபவர்கள் முதலாவது சந்தர்ப்பத்திலேயே வெளிப்படையாக சட்டத்தை மீறுகின்றதை மக்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *