1-1 என டிரா செய்த ஜப்பான், சுவீடன் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி

2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘F’ குழுவுக்கான லீக் போட்டியில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டு நாக்அவுட் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றன.

 

போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் வெற்றியை இலக்காகக் கொண்டு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஜப்பான் அணி நுணுக்கமான பாஸ்கள் மற்றும் நகர்வுகள் மூலம் கோல் வாய்ப்புகளை உருவாக்க முயன்ற நிலையில், சுவீடன் அணி வலுவான தற்காப்பு மற்றும் வேகமான எதிர்தாக்குதல்களை முன்னெடுத்தது.

 

ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஜப்பான் அணியின் டைசன் மேடா முதல் கோலைப் பதிவு செய்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஜப்பான் அணி அடித்த கோல்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்ததுடன், ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜப்பான் அணியின் புதிய சாதனையாகவும் அமைந்தது. இதற்கு முன், 2018 ரஷ்யா உலகக்கோப்பையில் ஜப்பான் 6 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

 

எனினும், ஜப்பான் முன்னிலை பெற்ற ஆறு நிமிடங்களிலேயே சுவீடன் அணியின் அந்தோனி எலாங்கா பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

 

அதன்பிறகு இரு அணிகளும் வெற்றிக்கான கோலைப் பெற தீவிரமாகப் போராடின. இருப்பினும், இரு அணிகளின் வலுவான தற்காப்பு ஆட்டத்தால் மேலதிக கோல்கள் எதுவும் பதிவாகாததால், போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

 

இந்த முடிவின் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஜப்பான் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக ஐந்தாவது முறையாகவும் குரூப் சுற்றைத் தாண்டி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ‘F’ குழுவில் நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள ஜப்பான் அணி, வருகிற திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாக்அவுட் சுற்றில் பிரேசிலை எதிர்கொள்ளவுள்ளது. சுவீடன் அணியும் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று தனது உலகக்கோப்பை பயணத்தைத் தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *