கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையான வினைத்திறனுடன் இயங்காத நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் செயற்பாட்டுமிக்கதாக மாற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் 34 வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்பட்டன.
கடைகள் வழங்கும் நிகழ்வில் கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு கடைகளை கையளித்தார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், அரச அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் வலுப்படுத்தப்படுவதன் மூலம் பிரதேசத்தின் வர்த்தக நடவடிக்கைகள் மேலும் விரிவடைவதுடன், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் அதிகளவு பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

