கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 23 ஓட்டங்களால் முன்னிலை

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 14வது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட தொடர் இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியது.

 

நாணய சுழற்சியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணித்தலைவர் சிறீபாஸ்கரலிங்கம் வேங்கைமாறன்  வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 30.4 பந்துப்பரிமாற்றம் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்றனர்.

 

அணி சார்பாக அதிகபட்சமாக ஜெயராம் மதுஷன் 68ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சார்பாக கருணாகரன் கரிசாந்தன் 05 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

 

பதிலுக்கு முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணியினர் 49.0 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 122 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்திருந்தனர்.

 

கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிசார்பாக நிர்மலன் அன்புக்குமரன் 23 ஓட்டத்தை அணி சார்பாக அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

 

பந்து வீச்சில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி சார்பாக கணேசமூர்த்தி கெளசிகன் மற்றும் வசந்தன் சாரங்கன் ஆகியோர் தலா மூன்று இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

 

தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் வரை 02 பந்துப்பரிமாற்றங்களை எதிர்கொண்டு 11 ஓட்டங்கள் பெற்ற நிலையில் நிறைவுக்கு வந்தது.

 

நிறைவுக்கு வர கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 23 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *