நுவரெலியாவில் தொடர் மழை; மரக்கறி வகைகள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்படுவதாக மக்கள் கவலை

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் நேற்று(28) பிற்பகல் பெய்த பலத்த மழையால் தாழ்நிலப் பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இதில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் முழுமையாக வீடுகளுக்குள் புகுந்ததால் வீடுகள் சேதமடைந்து மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் 16 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தோட்ட ஆலயத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் தற்போது வெள்ள நீர் வடிந்தோடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

மேலும் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தனது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் .

எனவே, நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் பாதுகாப்புடன் செயற்படுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *