நாடளாவிய ரீதியில் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டு அவற்றின் ஊடாக நிலையான மத நல்லிணக்கம் மற்றும் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை இளைஞர் யுவதிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் கிராம அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்த செயலமர்வு நேற்று(15) மாலை 5 மணி வரை மன்னார் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் காரியாலயத்தில் இடம் பெற்றது.
மன்னார் கிளை காரியாலய கிராம அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்புடன் நிறுவன அனுசரனையுடன் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் மன்னார் கிளைக்காரியாலயத்தினால் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம இளைஞர் யுவதிகளுக்கு குறித்த செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.
இந்த செயலமர்வின் இரண்டாம் கட்டமாக வட்டக்கண்டல் மற்றும் உப்புக்குளம் கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பல்லினம் சார் 30 இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஒவ்வொரு சமய அடையாளங்களையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் எவ்வாறு மதித்தல் என்றும் அவற்றை அவமதிப்பது பற்றியும் அவை மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் மத, நம்பிக்கை தொடர்பான உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் முன்வைத்து இடம்பெற்ற இந்த செயலமர்வில் இலகுபடுத்துனர்களாக மதுஷா டயஸ், அப்ரஜ் மர்சூக் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

