கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் எல்நினோ காலநிலையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், பெரும்போக நெற்செய்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், விவசாயத் துறையுடன் தொடர்புடைய திணைக்களங்கள் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர்கள் மற்றும் விவசாய சம்மேளன பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தற்போது சிறுபோக அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடைக்குப் பின்னர் வயல்களுக்கு தீ வைப்பதை தவிர்க்குமாறும், அவசியம் ஏற்பட்டால் கமநல அபிவிருத்தி அதிகாரிகளின் ஆலோசனையின்படி மட்டுமே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் விவசாயிகளிடம் வலியுறுத்தினர்.

