அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
54 வயதான புபுது தசநாயக்க அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் புபுது கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தார்.
அமெரிக்க அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அந்தஸ்தை பெற்றுக்கொள்வதற்கும் கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் நாடாக நிலைநிறுத்துவதற்கும் புபுது தசநாயக்க பல்வேறு வழிகளில் உதவினார்.
அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் தேசிய அணிக்கு மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை குறித்து புபுது தசநாயக்க கூறுகையில்,
“தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை எனக்கு கிடைத்த ஒரு மரியாதை. நான் அமெரிக்க கிரிக்கெட் அணியில் கடமையாற்றிய ஆரம்ப காலத்தில் சாதித்ததைப் பற்றி பெருமைப்படுகிறேன். மேலும் இந்த அணியில் மேலும் பாரிய சாதனைகளை படைப்பதற்கான மகத்தான ஆற்றலைக் காண்கிறேன். அமெரிக்க கிரிக்கெட்டுக்கு அர்த்தமுள்ள ஒன்றைத் தொடர்ந்து உருவாக்க வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
புபுது தசநாயக்க, இலங்கைக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் கனடாவுக்குச் சென்று தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கனேடிய தேசிய அணியில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

