அவசரகாலச் சட்டத்தை அடக்கு முறைக்கு பயன்படுத்துகிறதா பொலிஸ்?

டித்வா சூறாவளியால் நாடு எதிர்கொள்ளும் பேரழிவு சூழ்நிலை தொடர்பில் சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு எதிராக இலங்கை பொலிஸார் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை குடிமக்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியளித்த போதிலும், தவறான தகவல்களைப் பரப்பியதாக பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே இந்த சட்டத்தின் கீழ் சுமார் 60 விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட டித்வா சூறாவளி இலங்கைக்கு வருவதை அதிகாரிகளும் அரசாங்கமும் முன்கூட்டியே அறிந்திருந்ததா, அதனால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் மாத்திரமல்ல, நாடாளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் வெடித்தன.

அவசரகாலச் சட்டம் செயல்படுத்தப்படுகிறது

நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விதிகள் மற்றும் அதிகாரங்கள் செயல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பெட்ரிக் உதய குமார வூட்லர் தெரிவித்தார்.

“இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பேரனர்த்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி அவசரகால விதிமுறைகள், ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பொது ஒழுங்கைப் பேணுவதற்கும், பொது அமைதியைப் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விதிகள் மற்றும் அதிகாரங்கள் செயல்படுத்தப்படுகின்றன.”

சமூக ஊடகங்களில் பரவும் 57 சரிபார்க்கப்படாத மற்றும் பொய்யான தகவல் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

“கடந்த சில நாட்களில், குறிப்பாக இலங்கை பொலிஸ், அதேபோல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு விசேட நடவடிக்கை பிரிவு ஊடாக சமூகத்தில் பொய்யான, சரிபார்க்கப்படாத செய்திகள் மற்றும் கட்டுக்கதைகள் பரவி வருவதை அவதானித்துள்ளன. இந்த நேரத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிப் பிரிவு இதுபோன்ற 57 அவதானிப்புகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.”

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பிரிவு 20 இன் கீழ் குற்றங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

“இந்த அதிவிசேட வர்த்தமானி, பிரிவு 20 இன் மூலம், எந்தவொரு நபரும் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து வடிவிலோ, இணையத்தளம் ஊடாகவோ, அல்லது பிற ஊடகங்கள் மூலமாகவோ, பொதுமக்களை அச்சுறுத்தும் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு அல்லது தானியங்கி அமைப்புகள் மூலம், வெளியிடப்படும், உருவாக்கப்படும் அல்லது பரப்பப்படும் எந்தவொரு தவறான அறிக்கையின் மூலமும், எந்தவொரு தவறான அறிக்கையையும் வெளியிடுவது, உருவாக்குவது அல்லது பரப்புவது குற்றமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்கு நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின்னர் 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.”

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு

ஜனாதிபதி மற்றும் அரசியல்  அதிகாரத்தின் தெரிவு செய்யப்பட்ட சில உறுப்பினர்கள், குறிப்பாக வெளிநாட்டில் உள்ள தனிநபர்களால், அடிப்படையற்ற சேறு பூசலுக்கு இலக்காகி வருவதாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல கூறினார்.

மக்களின் பாதுகாப்பிற்காக அயராது உழைக்கும் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல அண்மையில் பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

“சமூக ஊடகங்கள் மூலம் ஜனாதிபதி மற்றும் அரசியல் அதிகாரத்தின் தெரிவு செய்யப்பட்ட சில நபர்கள் மீது அவர்கள் ஆதாரமற்ற சேறுபூசும் தாக்குதல்களை மிக மோசமான முறையில் தொடுக்கின்றனர். இது பின்னர் விரிவடையலாம். இப்போது அது அதிகரிக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் இதை குறிப்பாக இந்த சமூக ஊடக வலையமைப்பில் செய்கிறார்கள், மேலும் ஜனாதிபதிக்கும் இதனை செய்கிறார்கள், மற்ற அரசியல் அதிகார உறுப்பினர்கள் மீதான இந்த தாக்குதல்கள் ஓரிரு நாட்களில் சாதாரணமாகிவிடலாம்.”

எவ்வாறெனினும் தன்மீது சேறு பூசுவது தொடர்பில் தனக்கு கவலையில்லை எனவும், மக்களை தவறாக வழிநடத்தும் அல்லது பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“இந்த பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் எந்த வகையிலும் மக்களின் ஜனநாயக உரிமை பாதிக்கப்படும் வகையில் பயன்படுத்தப்படமாட்டது. மக்களை அச்சுறுத்துகின்ற மக்களை தவறாக வழிநடத்துகின்ற இந்த அமைதி நிலைமையைக் குழப்புவதற்காக, இந்த அனர்த்த நிலைமையில், ஏதாவது மோதல், குழப்பம் விளைவிக்கின்ற வகையில் எவரும் செயற்பட்டால் இந்த சட்டம் பயன்படுத்தப்படும். இந்த பேரழிவு நிலைமையில் இருந்து மீள, பேரழிவில் இருந்து மீள்வதற்கான திட்டத்திற்கு தடையாக இருந்தால் அதற்காக மாத்திரம் இந்த சட்டத்தை பயன்படுத்துவோம். அதனைவிடுத்து மக்களின் கருத்து, எழுத்து, சேறு பூசுதல், அவதூறு, அது அவர்களுக்கு மாத்திரமே. அவரே பதிவிடுவார், அவரே பார்ப்பார், அவரே சிரிப்பார், அது பரவாயில்லை.”

சந்தேகநபர் அல்ல குற்றம்சாட்டப்பட்டவர்

நவம்பர் 28, 2025 வெள்ளிக்கிழமை, நாட்டின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 2464/31 என்ற பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட அவசரகால விதிமுறைகளை ‘நேரயடியாக கையில் எடுத்துக்கொள்ளுமாறு’ கொழும்பு மாவட்டப் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் விசேட தன்மை குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் சுனில் வட்டகல, பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

“இந்த வர்த்தமானி அறிவிப்பின் விசேடம் என்னவென்றால், கைது செய்யப்படுவது சந்தேகநபர் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவரே கைது செய்யப்படுகிறார். எனவே, இதனை குடிமக்களுக்கு விளக்குங்கள்.“

தனிப்பட்ட இலக்குகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் பங்களிப்பு மற்றும் முயற்சிகளை ஆதரிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் உதய குமார வூட்லர், கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

“எனவே, இந்த நேரத்தில், உங்கள் தனிப்பட்ட இலக்குகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை, குறிப்பாக வெறுக்கத்தக்க விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளும் பங்களிப்பு, முயற்சிகளை ஆதரிக்குமாறு பொதுமக்களை பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *