யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் செந்தூரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த போட்டிகளில் 6 அணிகளில் பங்குபற்றுவதற்காக 170 க்கும் மேற்பட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் மூன்று அணிகளுக்கான உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
ஆவரங்கால், அச்சுவேலி, புத்தூர், அரியாலை, நீர்வேலி, வடமராட்சி, வலிகாமம் மற்றும் தீவகம் ஆகிய அணிகள் சார்பில் வீரர்கள் பங்குபற்ற உள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்திய சங்கத்தின் செயலாளர் தவபாலன் மூன்றாவது தடவையாக இடம்பெறும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட பிரிமியர் லீக் போட்டியானது கிராமங்களில் இருக்கும் கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய ரீதியில் பிரகாசிப்பதற்கு வாய்ப்புகளை வழங்கும் ஒரு போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.
எதிர்வரும் மாதம் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

