வாகரை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உள்ள மாங்கேணி கிராமத்தில் மரக்கறிப் பயிர்ச் செய்கையில் நோய் பீடைக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
இதனை மட்டக்களப்பு விவசாயத் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் மு. பரமேஸ்வரன் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.
விவசாயிகளுக்கான நிலக்கடலை மானிய உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது மண் பரிசோதனை செய்து காட்டப்பட்டது. சிறந்த பசளை உள்ள மண்ணை தெரிவு செய்து அதில் விவசாயிகள் விளைச்சலை பெறக் கூடியவாறு பயிரிடல் தொடர்பாக மண்ணை எவ்வாறு தெரிவு செய்வது தொடர்பாக மண் பரிசோதனை நிகழ்த்திக் காட்டப்பட்டது.
ஒளிப் பொறி மூலம் பூச்சிகளை விரட்டுதல், ஒட்டுப் பொறி பயன்படுத்தி பூச்சிகளை மஞ்சள் பேப்பரில் ஒட்டவைத்து பயிர்களை பாதுகாத்தல், இனக் கவர்ச்சி மூலம் ஆண் பூச்சிகளை கவர்ந்து வைத்து பூச்சிகளின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தல், மரக்கறி செய்கையில் பாதுகாப்பான உறையிடுதல் மூலம் பூச்சிகளின் நோய் தாக்கத்தில் இருந்து மறக்கறி வகைகளை பாதுகாத்தல் என்பன தொடர்பாக விவசாயிகளுக்கு களச் செயற்பாட்டு மூலம் விளக்கமளிக்கப்பட்டது.


