கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 06 ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று (26) சாய்ந்தமருது அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கமானது தற்போதைய நிலையில் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாகவும், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்களில் இந்த நிலைமை மிகவும் தீவிரமாக அவதானிக்கப்பட்டு வருவதன் காரணமாக இன்று மதஸ்தலமான சாய்ந்தமருது அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகம் சுத்தப்படுத்தும் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது 06 ஆம் பிரிவு பிரஜாசக்தியின் தவிசாளர் எம்.ஐ. நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் எம்.ஐ.எஸ். பர்வீன், கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.கே. சானாஸ், சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள் மற்றும் சாய்ந்தமருது அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆகியோர் இணைந்து பள்ளிவாசல் வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்தனர்.
டெங்கு நோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய (24) முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

