மாவட்டங்களில் அதிகரிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை

  கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, மட்டக்களப்பு, கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நாட்களில் சித்திரை புத்தாண்டு தினத்திலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழக் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் தற்போது நிலவி வருகின்ற வறட்சியான காலநிலையினால் ஏற்பட்டுள்ள உடல் உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக இவ்வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளைச் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு வெளியிடங்களில் இருந்து அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வருகின்ற பழ வகைகளின் தரங்களைப் பரிசோதிப்பதற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தினமும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இக்காலத்தின் அதிக வெப்பத்தால் வெள்ளரிப்பழத்திற்கே அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் 250 ரூபாய் முதல் சுமார் 850 ரூபாய் வரை வெள்ளரிப்பழம் சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெப்பமான காலங்களிலேயே அதிகமாக வெள்ளரிப்பழ அறுவடையே மேற்கொள்ளப்படுவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச் செய்கை இடம்பெற்று வருவதுடன் அவை ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *