ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கான சவுதி அரேபியாவின் நவீன தொழில்நுட்பப் புரட்சி

புனித மக்கா மற்றும் மதீனாவை நோக்கி ஆண்டுதோறும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மேற்கொள்ளும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகள், இப்போது சவுதி அரேபியாவின் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் உதவியினால் மேலும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாறியுள்ளன.

 

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல்சௌத்தும், இளவரசர் மற்றும் பிரதமர் முகம்மத் பின் சல்மானும் தலைமையேற்று முன்னெடுத்து வரும் “விஷன் 2030” திட்டத்தின் கீழ், புனித யாத்திரையின் ஒவ்வொரு படியிலும் தொழில்நுட்ப மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதன் மூலம், யாத்ரீகர்களின் ஆன்மீகப் பயணம் நவீனத்தன்மை, வசதி மற்றும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது.

 

1️⃣ ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் – “நுசுக்”

 

யாத்ரீகர்களின் முழுப் பயண அனுபவத்தையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் “நுசுக்” தளம், விசா விண்ணப்பம், பயணத் திட்டமிடல், தங்குமிட ஏற்பாடு மற்றும் உம்ரா அனுமதி போன்ற 120-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது.

 

இதன் மூலம் யாத்ரீகர்கள் தங்கள் புனிதப் பயணத்தை வீட்டிலிருந்தே திட்டமிட்டு, வெளிப்படையாக சேவைகளைத் தேர்ந்தெடுக்க முடிகிறது.

 

2️⃣ செயற்கை நுண்ணறிவு மூலம் கூட்ட முகாமைத்துவம்.

 

“பசீர்” மற்றும் “ஸவாஹெர்” போன்ற நவீன ஏஐ அமைப்புகள் ஆயிரக்கணக்கான கேமராக்களின் உதவியுடன் யாத்ரீகர்களின் நடமாட்டத்தை நேரடி முறையில் கண்காணிக்கின்றன.

 

இதன் மூலம் அதிக நெரிசல் ஏற்படும் பகுதிகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு படைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றன.

 

மேலும், பல மொழிகளில் பேசும் ரோபோக்கள் மஸ்ஜித் அல் ஹராம் மற்றும் மஸ்ஜித் நபவியில் வழிகாட்டுதல், மத விளக்கங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குகின்றன.

 

3️⃣ ஸ்மார்ட் ஹஜ் அட்டை மற்றும் மருத்துவ வசதிகள்.

 

ஒவ்வொரு யாத்ரீகருக்கும் வழங்கப்படும் ஸ்மார்ட் ஹாஜ் அட்டை, அவர்களின் டிஜிட்டல் அடையாளமாகச் செயல்படுகிறது.

 

இதில் தனிப்பட்ட விவரங்கள், தங்குமிட விவரங்கள், மருத்துவ வரலாறு போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

என்எப்சி தொழில்நுட்பம் மூலம் தொலைந்துபோன யாத்ரீகர்களை கண்டறியவும், அவசரகாலங்களில் மருத்துவ உதவியை உடனடியாக வழங்கவும் இது பெரிதும் உதவுகிறது.

 

மேலும், ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் யாத்ரீகர்களின் உடல் நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது.

 

4️⃣ “மக்காவுக்கான வழி” திட்டம்.

 

பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளின் யாத்ரீகர்களுக்காக அறிமுகமான இந்த முன்னோடித் திட்டம், பயணத்தை சவுதி அரேபியாவுக்கு வருவதற்கு முன்பே எளிதாக்குகிறது.

 

விசா மற்றும் குடிவரவு நடைமுறைகள் அவர்கள் புறப்படும் நாட்டிலேயே முடிவடைந்துவிடுவதால், யாத்ரீகர்கள் ஜித்தா அல்லது மதீனாவை அடைந்ததும் நேரடியாக தங்கள் தங்குமிடங்களுக்குச் சிரமமின்றி, தாமதமின்றி செல்ல முடிகிறது.

 

5️⃣ நுசுக் டிஜிட்டல் வாலட்

 

யாத்ரீகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட உலகின் முதல் சர்வதேச டிஜிட்டல் வாலட் இது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுகின்றன.

 

இந்த அனைத்து முயற்சிகளும் சவுதி அரேபியாவின் விஷன் 2030 இலக்கை நோக்கி ஒரு முக்கிய முன்னேற்றமாக விளங்குகின்றன.

 

மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மத் பின் சல்மானின் தொலைநோக்கு சிந்தனை, புனித யாத்திரையின் அனுபவத்தை உலகளவில் புதிய தரத்திற்கு உயர்த்தியுள்ளது எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *