தமிழர்களின் செயற்பாடுகளை கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகள் நியமனமித்துள்ளதாக குற்றச்சாட்டு

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையைத் தந்துள்ளதாகக் கூறும் அரசாங்கம், தமிழர்களின் செயற்பாடுகளை கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகளை நியமித்துள்ளதாக கிழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

தமிழ் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களை பொலிஸார் வரவழைத்து தடை உத்தரவுகளை விதித்துள்ளதாகவும் வடக்கிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அம்பாறை, கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் குழுவின் தலைவர் புஷ்பராஜ் துஷானந்தன், தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாக பகிரங்கமாகக் கூறும் அரசாங்கம், தமிழர்களை அச்சுறுத்துவதற்காக புலனாய்வு அதிகாரிகளை நியமித்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.

 

“மாவீரர்களை அனுஷ்டிப்பதற்கு அனுமதிப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தாலும் அதற்கான கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன. நாங்கள் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிளை செய்கின்றபோதிலும் சரி, எங்களது செயற்பாட்டாளர்களையும் தொடர்ந்து புலனாய்வாளர்கள் கண்காணிப்பில்தான் வைத்திருப்பதாக நாங்கள் அறிகின்றோம். ஏனென்றால் நாங்கள் செல்லும் இடமெல்லாம் புலனாய்வுத்துறையினர் இருக்கின்றார்கள்.

 

ஞதுயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிக்கு சென்றால் 10, 15 புலனாய்வாளர்கள் இருக்கின்றார்கள். நான் கல்முனையில் இருந்து திருக்கோயில் சென்று திரும்பும் வரையில் என்னை பின்தொடர்கின்றார்கள். நான் கஞ்சிக்குடிச்சாறு துயிலும் இல்லத்திற்கு சென்று வரும்போது அக்கரைப்பற்று வரையில் புலனாய்வாளர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தார்கள். நான் அதனை அவதானித்தேன். ஆகவே வெளியில் அவர்கள் தம்மை நல்லவர்களாகவும், தமிழர்களுக்கு சமவுரிமைமை வழங்கியவர்களாகவும் காட்டிக்கொண்டு, புலனாய்வாளர்களைக் கொண்டு எங்களையும், தமிழ் மக்களையும் அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.”

 

மாவீரர் நினைவு தினம் நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் துயிலும் இல்லங்களை சுத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அங்கு விடுதலைப் புலிகள் நினைவேந்தல் அல்லது அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டால் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்னவென, நவம்பர் 18 அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, “அப்படியான ஒன்று நடந்தால் அதற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” எனக் கூறியிருந்தார்.

 

“யாரும் தனது இறந்த உறவினரை நினைவுகூரும் குடிமக்களுக்கான உரிமையை ஏற்றுக்கொண்டாலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவோ அல்லது அந்த போர்வையில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. அதற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.”

 

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தன்னை அழைத்து மாவீரர் நினைவு நாள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து நிபந்தனைகளை விதித்ததாக, யாழ்ப்பாணம், உடுத்துறை துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

 

“நாங்கள் மாவீரர் பாடல்களை ஒலிபரப்ப முடியாது என்றும், மாவீரர்களின் சீருடை அணிந்த படங்களை வைக்கக்கூடாது என்றும், கார்த்திகைப் பூக்களும் நிகழ்வில் இருக்கக்கூடாது எனவும், சினிமா பாடல்களை பயன்படுத்த வேண்டும் எனவும், இதனை பின்பற்ற தவறினால் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *