ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான கொடியேற்ற திருவிழா

கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான புளியந்தீவு சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான கொடியேற்ற நிகழ்வு இன்று மதியம் சுப நேரத்தில் அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் பக்திப் பூர்வமாக இடம்பெற்றது.

நேற்று மாலை கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு அதன் பின்பு இன்று காலை சித்தி விக்னேஸ்வர பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம் பெற்றதன் பின்பு கொடி மரத்தின் அருகே எம்பெருமான் எழுந்தருளப்பண்ணி அந்தணர்களின் வேத பாராயணம் முழங்க தேவஸ்தானத்தில் பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவி சாந்த குருக்கள் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

புளியந்தீவு சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு திருவிழாவான தேர் திருவிழா எதிர் வரும் 11ம் திகதி அன்று இடம்பெறவுள்ளதுடன் திரு வேட்டை திருவிழா 10ம் திகதி அன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஆலயத்தின் தீர்த்த திருவிழாவானது 12ம் திகதி அன்று மட்டு மாமாங்க ஆலய தீர்த்தக் கரையில் நண்பகள் இடம்பெற உள்ளது. இதேவேளை இன்றைய கொடியேற்ற நிகழ்வில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து அதிகளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *