கத்தார் தீபகற்பம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதக் குடியேற்றங்களைக்கொண்ட ஒரு தொன்மையான பகுதியாகும். அதன் நவீன வரலாறு முத்து வணிகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது.
18ம் நூற்றாண்டில், அல் தானி வம்சத்தின் குலங்கள் ஒன்றிணைந்து, கத்தார் பகுதியை ஒரு ஒற்றை அரசியல் அமைப்பாக மாற்றின. இதுவே நவீன கத்தாருக்கான அடித்தளமாக அமைந்தது.
வரலாற்றுப்பயணமும் தேசிய தினமும்
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கத்தார் ஓட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்தது. பின்னர், 1916ல் பிரிட்டிஷ் பாதுகாப்புப்பகுதியாக மாறியது.
கத்தார், அண்டை நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க மறுத்து, செப்டம்பர் 3, 1971 அன்று முழுமையான இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
கத்தார் தனது தேசிய தினத்தை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று கொண்டாடுகிறது. இந்த நாள், 1878ம் ஆண்டில் ஷேக் ஜாசிம் பின் முகமது அல் தானி ஆட்சிக்கு வந்து, நாட்டை ஒருங்கிணைத்ததை நினைவுகூரும் நாளாகும். இது நிறுவனர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
கத்தாரின் மன்னர்களும் அதிவேக வளர்ச்சியும்
கத்தார் தனது அதிவேக பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை, 1940களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் அபரிமிதமான இருப்பைக்கொண்டே அடைந்தது. கத்தார் உலகின் மூன்றாவது பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இருப்பைக்கொண்டுள்ளது.
தற்போதைய மன்னரின் சகாப்தம்:
ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி
ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி 2013ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, கத்தாரை ஒரு உலகளாவிய சக்தியாக மாற்றும் இலக்குடன் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.
பொருளாதாரப் பல்வகைப்படுத்தல்:
எண்ணெயை மட்டுமே சார்ந்திருக்காமல், நிலையான பொருளாதார வளர்ச்சி, மனித வள மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘கத்தார் தேசிய தொலைநோக்கு 2030’ திட்டத்தை உறுதியுடன் செயற்படுத்தினார்.
உலகளாவிய மையம்:
2022 எப்ஐஎப்ஏ உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது, கத்தாரின் இராஜதந்திர மற்றும் உள்கட்டமைப்புத் திறனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். தோஹா மெட்ரோ, ஹமாத் பன்னாட்டு விமான நிலையம் போன்ற அதிநவீன கட்டமைப்புகள் கட்டப்பட்டன.
சமூக சீர்திருத்தங்கள்:
பணியாளர் உரிமைகளைப்பாதுகாக்கும் நோக்குடன், வெளிநாட்டுத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்திய கஃபலா முறையை நீக்கியது உள்ளிட்ட முக்கியமான தொழிலாளர் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார்.
எதிர்கொண்ட முக்கிய சவாலும் இராஜதந்திர வெற்றியும்
ஷேக் தமீமின் ஆட்சியில் கத்தார் எதிர்கொண்ட மிகக் கடுமையான சவாலாக 2017 வளைகுடா நெருக்கடியாகும். இதனை சாதுரியமாக ஷேக் தமீமின் கையாண்டார். இது கத்தாரின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
கத்தார் – இலங்கை உறவுகள்:
ஆழமான தொடர்பு
இலங்கைக்கும் கத்தாருக்குமிடையேயான இராஜதந்திர உறவுகள் ஜூன் 12, 1976 இல் நிறுவப்பட்டது. இந்த உறவு ஆழமானதுடன், குறிப்பாகப் பொருளாதாரத்துறைகளில் மிகவும் வலுவாக உள்ளது.
தொழிலாளர் சக்தி:
கத்தாரில் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு கத்தார் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. அவர்களின் அந்நியச்செலாவணி இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய முதுகெலும்பாகவுள்ளது.
பொருளாதார உறவு:
கத்தார் இலங்கைக்கு முக்கியமாக திரவமாக்கப்பட்ட எரிவாயு மற்றும் எரிசக்திப்பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இலங்கை, தேயிலை மற்றும் ஆடைப் பொருட்களைக் கத்தாருக்கு ஏற்றுமதி செய்கிறது.
எதிர்காலப்பங்காளித்துவம்:
தற்போது இந்த உறவு தொழிலாளர் மைய உறவிலிருந்து முதலீடு, சுற்றுலா மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒரு பரந்த பங்காளித்துவத்தை நோக்கி விரிவடைந்து வருகிறது.
ஒரு உலகளாவிய கலங்கரை விளக்கம்
கத்தார் தனது பலம் வாய்ந்த தலைமை, வரலாற்றுச் சவால்களைச் சமாளிக்கும் திறமை மற்றும் புத்திசாலித்தனமான உலகளாவிய அணுகுமுறை மூலம், உலகின் மிகச்சிறிய நாடாக இருந்தாலும், மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அதன் “தேசிய தொலைநோக்கு 2030” திட்டத்தின் மூலம், நிலையான மற்றும் அறிவுசார்ந்த எதிர்காலத்தை நோக்கி அது முன்னேறிச் செல்கிறது.
அல் தானி வம்சத்தின் முற்போக்கான தலைமையின் கீழ் கத்தார் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து, பொருளாதார மற்றும் இராஜதந்திரத்துறைகளில் புதிய உச்சங்களைத் தொட்டு, உலக நாடுகளுக்கு ஒரு நம்பகமான பங்காளியாகத் திகழ வாழ்த்துகிறோம்.

