கடந்த 16 ஆம் திகதி கொழும்பு மெய்வல்லுநர் சங்கத்தில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய மட்டக்களப்பைச் சேர்ந்த ஈஸ்பரன் தேசிய மெய்வல்லுநர் அபிவிருத்திக் குழுவின் உறுப்பினராகவும் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கான இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கையின் தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் விளையாட்டு டிப்ளோமா பாடநெறியில் மெய்வல்லுநர் துறையில் விசேட சித்தியையும், மெய்வல்லுநர் நடுவர்களுக்கான பரீட்சையில் சித்தியையும், இந்தியாவின் கேரள மாநிலத்தின் இலட்சுமிபாய் தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெற்ற மெய்வல்லுநர் பயிற்சி நெறியில் பங்குபற்றி விசேட சித்தியையும், சர்வதேச ஒலிம்பிக் குழுவால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிருவாகம் பாடநெறியில் சித்தியையும் பெற்றுள்ளார்.
இத்தோடு, ஆசிய கனிஸ்ட தட களப் போட்டிகளில் நடுவராகவும், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தடகளப் போட்டிகளுக்கான உத்தியோகப்பூர்வ மதிப்பீட்டாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
பாடசாலைக் காலங்களில் சிறந்த மெய்வல்லுநர் வீரராகத் திறமை காட்டிய இவர் கிழக்கு மாகாணத்தில் சிரேஸ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

