புத்தளத்தின் உப்பள பிரச்சினைக்குத் தீர்வு தருமாறு ரவூப் ஹக்கீம் கோரிக்கை

புத்தளத்தின் உப்பள பிரச்சினைக்குது தீர்வு தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

புத்தள உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே சபை ஒத்திவைப்பு நேர பிரேரணையில் குறிப்பிட்ட நிலையில் இன்று மேற்படி கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

 

புத்தளம் பிரதேசத்தில் பூர்வீகக்காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த உப்பள சங்கத்தின் உற்பத்தியை தடைசெய்து அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு காணிகளை அரசு அபகரித்துக் கொண்டது.

 

அது மட்டுமல்ல, நீண்டகாலமாக அவர்கள் உப்பு உற்பத்தி செய்து வந்த காணிகளை வேறு நபர்களுக்கு வழங்கும் நோக்கில் கடந்த அரசாங்க காலத்தில் சில விடயங்கள் நடந்தெறின.

 

அது இன ரீதியான பாகுபாடாகவும் அப்பிரதேசங்களில் பார்க்கப்படும் அதே வேளை, இன ரீதியான விடயங்களாக இவ்விவகாரங்கள் நடக்கவோ அணுகப்படவோ கூடாது எனப்பேசுகின்ற அரசு புத்தளம் பிரதேச செயலகத்தினூடாக அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற அக்காணிகளையும் அனுமதிப்பத்திரத்தையும் உப்பள சங்க உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலம் அக்காணிகள் மீளவும் கையளிக்க வேண்டும்.

 

அதனை உப்பு பிரச்சினைக்கான தீர்வுகளில் ஓரங்கமாகப் பார்க்க வேண்டும்.

 

அது மட்டுமல்லமால், புத்தளத்தில் இருக்கின்ற களப்புகளில் வெவ்வேறு நீர் நிலைகளின் நீர் சேர்வதனால் உவர்த்தன்மை வெகுவாகக் குறைந்து வருகின்றது.

 

1-3% இருந்த உவர்த்தன்மை இன்று 0.5% இருந்து 1% வரையுள்ளது.

 

எனவே தான் உப்பு உற்பத்தியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

இதனை அங்கிருக்கின்ற உப்பள உரிமையாளர்களும் ஏற்கனவே அரசுக்கு அறிவித்துள்ளார்கள்.

 

ஆனால், புத்தளத்தில் அதற்கான அதிகாரமுள்ள எவருமில்லை. அரசாங்கத்தினூடாக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படுவதில்லையென்ற பாரிய பிரச்சினையுள்ளது.

 

எனவே, இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு உப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

 

அதேநேரம், உப்பு வியாபாரத்தில் உப்பு மாபியாவொன்று உருவாகியிருக்கிறது. அந்த உப்பு மாபியாவுக்குப் பின்னால் அரசாங்கத்தின் அனுசரணை உள்ளதா என்பதையும் காலதாமதத்திற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்.

 

ஏன் காலம் தாழ்த்தி மும்பாயிலிருந்து உப்பு இறக்குமதி செய்கின்றார்கள்? 4 மில்லியன் மூடைகள் உப்பு தேவைப்படும் நிலையில் சுமார் 6 இலட்சம் மூடைகள் தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

 

அதில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழலை விசாரிக்க வேண்டும்.

 

உப்புக்கம்பனியின் சொந்தக்காரர்கள் யார்? ஏன் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் அரசு கவனத்திற்கொள்ளல் வேண்டிய மிக முக்கியமாகும்.

 

அத்துடன், ஊழல் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *