வன்னியின் பெரும் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான 14வது வன்னியின் பெரும் சமர் துடுப்பாட்டத்தொடர் இன்று(27) ஆரம்பமானது.
அந்த வகையில் கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமான போட்டித் தொடரின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கிறது.
இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணித்தலைவர் தமிழின்பன் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியை பணிக்க முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 66.2 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 171 பெற்றனர்.
அணி சார்பாக அதிகபட்சமாக டிலக்சன் 65 ஓட்டங்களைப்பெற்றார். பந்து வீச்சில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி சார்பாக கிருஸ்ணமேனன் 05 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 35 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 102 ஓட்டங்களுக்கு 07 இலக்குகளை இழந்த நிலையில் முதலாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.


