எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான முறைப்பாடுகளை தீர்ப்பது குறித்து உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு செயலமர்வு இன்று(28) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு செயலமர்வானது தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய உள்ளூராட்சி முறைமையின் தனித்துவமான அம்சங்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்தார்.
இதன்போது பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நிகழ்நிலை மூலம் இணைந்து கொண்டு உரையாற்றினார்.
தேர்தல்களின் போது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்புக்கள் குறித்து சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஷ் கருணாநாயக்க மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தேர்தல் சட்டத்தின் சட்ட விதிகள் குறித்தும் விரிவுரைகளை வழங்கினர்.
தேர்தல் சட்டம், தேர்தல் பிணக்குகள் முகாமைத்துவ மையம் மற்றும் காவல்துறையின் பொறுப்பு, தேர்தல் செலவின ஒழுங்குமுறை, பிரச்சார அலுவலகங்கள் மற்றும் பிரச்சார கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களை
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம், விசாரணை மற்றும் திட்டங்கள்) பி. பீ. சி. குலரத்னவால் தெளிவூட்டப்பட்டன.
மேலும், பொலிஸ் அதிகாரிகளின் தேர்தல் கடமைகள் குறித்த விரிவுரையானது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவால் நடாத்தப்பட்டது.
இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.கே.டி. நெரஞ்சன், பொலன்னறுவை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


