இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் நாளை(06) இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று(05) ஆரம்பமானது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 478,000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 19 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் 202 இடங்கள் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும். இவ்வாறு உரிய இடங்களில் எண்ணப்பட்டு அப்பகுதிக்குப் பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தெரிவிக்கப்படும். பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள் குறித்து உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார்.
தொடர்ந்து வாக்குகள் உள்ளிட்ட சகல ஆவணங்களும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்திற்கு எடுத்து வரப்படும். பின்னர் உத்தியோகப்பூர்வமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.
இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்து கொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


