கனரக உழவு இயந்திரம் பயன்படுத்தும் கரைவலை தொழிலை தடை செய்யுமாறு கோரிக்கை

தடைசெய்யப்பட்ட கனரக உழவு இயந்திரம் பயன்படுத்தும் கரைவலைத் தொழிலை தடை செய்யுமாறு கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் நேரில் மஜகர் வழங்கினர்.
குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது,
கரைவலை மீன்பிடித் தொழில் என்பது வலையை அமைத்து இழுப்பதற்கு மனித வலுவை மட்டுமே பயன்படுத்தும் ஒரு பாரம்பரியத் தொழிலாகும்.
1986 ஆம் ஆண்டின் சட்டத்தின் படி கரைவலை மீன்பிடியானது இயந்திரம் பொருத்தப்படாத படகுகள் மூலம் வலை விரிக்கப்பட்டு கரையிலுள்ள இரு குழுவினரால் கைகளின் மூலம் படிப்படியாகக் கரைக்குக் கொண்டு வரப்படுகின்றது.
கரைவலை மீன்பிடித் தொழிலானது இயந்திரமயமாக்கப்படாத இலங்கையின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
அங்கு படகுகளிலோ அல்லது மீனவர்களினாலோ இயந்திரங்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இன்று டிராக்டர்களின் பயன்பாடுகளின் மூலம் கரைவலை மீன்பிடியும் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி முறைகளில் ஒன்றாக மாறி வருகின்றது.
டிராக்டர்களைப் பயன்படுத்தி வலை விரிக்கப்படும் பொழுது மனிதர்களால் வலை விரிக்கப்படுவதனை விட அதிக தூரத்திற்கு விரிக்க முடிகின்றது. எனினும் கரைவலைத் தொழிலின் வினைத்திறனை அதிகரிப்பதானது கடல் வளங்களிற்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றது. இதனால் இத் தொழில் செய்யப்படும் பகுதிகளில் சிறு தொழில் செய்யும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் தொழில் உபகரணங்களும் அழிக்கப்படுகின்றன. இதனால் நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. அத்துடன் அதிக குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
65 வலை மீன்பிடித்தலிற்கு டிராக்டர் பயன்படுத்தப்படும் பொழுது தனி மனித முதலாளித்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. மேலும் சிறு தொழில் மீனவர்களிற்குக் குறைவான நன்மைகளே கிடைக்கின்றன. ஆகவே பாரம்பரியக் கரைவலை மீன்பிடித்தலானது இயந்திரமயமாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டியதும் தடுக்கப்பட வேண்டியதுமான ஒன்றாகும். அத்துடன் கரைகளில் வலைகளை இழுப்பதற்கு டிராக்டர் பயன்படுத்தப்படும் பொழுது அது மண்ணரிப்பினை ஏற்படுத்த ஏதுவான காரணியாக அமைகின்றது.
பெரும்பாண்மையான சிறு தொழில் மீனவர்கள் பயன்பெறும் வகையிலும் மண்ணரிப்பின் பாதக விளைவுகளைத் தவிர்பதற்குமாகக் கரைவலை மீன்பிடித்தலைப் பாரம்பரிய முறையிலேயே நடைமுறைப்படத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *